தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் 50 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய அரிய வகை பாத்திரங்கள் கண்டுபிடிப்பு

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில பூட்டிக்கிடந்த கட்டிடத்தை திறந்து பார்த்த போது 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பழமையான பாத்திரங்கள் கிடைத்தது. இதில் ஒரு பகுதி அருங்காட்சியகத்திற்கும் மற்றொரு பகுதி ஏலம் விடப்பட்ட வகையில் ரூ.9 லட்சம் கிடைத்தது.தஞ்சை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை 1958ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செடி, கொடிகள் மண்டிக்காணப்பட்ட 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் 2 கட்டிடங்கள் பூட்டியே கிடந்தன. இதைப்பார்த்த மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, அந்த கட்டிடங்களை சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கில், அங்கு மண்டி கிடந்த செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.தன் காரணமாக பொக்ளைன் எந்திரம் மூலம் செடி, கொடிகள், புதர்கள் அகற்றும் பணி நடைபெற்றது.இந்த பணிகள் முடிவடைந்தவுடன் அங்கிருந்த கட்டிடங்களில் பூட்டு திறக்கப்பட்டு பணியாளர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு பெரிய அளவிலான பழைய பாத்திரங்கள் இருந்தது.
தேக்சா, இட்டி கொப்பறை, காபி வடிகட்டி, டீ பாய்லர், பால் கேன்கள், அண்டா, கொப்பறை, எண்ணெய் சட்டி, மண்எண்ணெய் அளக்கும் பல்வேறு அளவீடு கொண்ட குவளை, பால் குவளை, அரிசி அளக்கும் படிகள் என ஏராளமான பாத்திரங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் வைத்திருப்பது தெரிய வந்தது. இந்த பாத்திரங்கள் அனைத்தும் செம்பு, பித்தளை, அலுமினியம் செய்யப்பட்டு, அதிக எடை கொண்டதாகவும், அளவில் பெரியனவாகவும் இருந்தது. மருத்துவமனையில் முன்பு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் என்பதும் தெரிய வந்தது.




